ஸ்கிம்மர் கருவி மூலம் 64 பேரிடம் ரூ.7½ லட்சம் மோசடி - 3 பேர் சிக்கினர்

ஸ்கிம்மர் கருவி மூலம் 64 பேரிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2018-08-16 04:43 IST
மும்பை,

மும்பையில் வங்கி வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மற்றும் கடன் அட்டைகளின் விவரங்களை திருடி பணமோசடி செய்து வருவதாக போலீசாருக்கு அதிகளவு புகார்கள் வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்து வந்த கரண் தனேஷ், துக்காராம், அவரது சகோதரர் மாருதி ஆகிய 3 பேர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடன் அட்டை மூலம் பில் கட்டணத்தை செலுத்தும் போது இவர்கள் ஸ்கிம்மர் கருவி மூலம் அதன் தகவல்களை திருடி உள்ளனர். மேலும் கர்நாடக மாநிலம் பெல்காவியில் வைத்து போலி ஏ.டி.எம். அட்டைகளை தயார் செய்து அதன் மூலம் 64 பேரிடம் ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் வரை பணமோசடி செய்து இருந்தது தெரியவந்தது.

கைதான 3 பேர்களிடம் இருந்து 8 செல்போன்கள், மடிக்கணினி, 2 ஸ்கிம்மர் கருவிகள் மற்றும் ஏராளமான போலி அட்டைகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்