கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்குகின்றனர், நாராயணசாமியிடம் கடிதம் கொடுத்தனர்

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு புதுச்சேரி அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்குகின்றனர்.

Update: 2018-08-21 00:10 GMT
புதுச்சேரி,

கேரளாவில் வரலாறு காணாத மழை கொட்டியதால் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இதில் சிக்கி 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு பல்வேறு மாநிலங்கள் நிதி உதவி அளித்துள்ளன. இதுமட்டுமின்றி நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வருகின்றன. புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்தார். அரசு ஊழியர்கள் கேரளாவுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி, நாராயணசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதை ஏற்று புதுவை அரசு ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தை கேரள மாநில நிவாரணத்துக்கு வழங்குவதாக அறிவித்தனர். இதுகுறித்து மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி, அரசு ஊழியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சேஷாச்சலம், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன் ஆகியோர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை கொடுத்தனர்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அரசு சார்பில் வழங்குவதாக அறிவித்துள்ளேன். அரசு ஊழியர்கள் வழங்கும் நிதி ரூ.5 கோடி வரும். உள்ளாட்சி உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வழங்கினால் மேலும் ரூ.2 கோடி கிடைக்கும். புதுவை அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிதியை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங், தன்னாட்சி கல்லூரிகளும் நிதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலக கட்டிடத்தில் கேரளாவுக்கு நிதி திரட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் ஷாஜகான் அரசு செயலாளர் சரண், கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, டி.ஐ.ஜி. சந்திரன், வணிக வரித்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ், தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன், இயக்குனர் பிரியதர்ஷிணி உள்பட தொழிற்சாலை உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனமுவந்து தாராளமாக உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்காக இந்தியன் வங்கியில் தனிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்