கயத்தாறு அருகே காற்றாலை அமைக்க இடைக்கால தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

கயத்தாறு அருகே காற்றாலை அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2018-09-07 22:30 GMT

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளத்தைச் சேர்ந்த முருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எங்கள் கிராமத்தில் தனியார் காற்றாலை அமைக்கும் பணிக்காக விவசாய நிலங்களை விலைக்கு வாங்கி வருகின்றனர். விவசாய நிலங்கள், நீரோடைகள் உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலை அமைப்பதற்கான உதிரி பாகங்கள் கொண்டு செல்வதற்கு பாதை அமைக்கின்றனர். இந்த பாதைக்காக உப்போடை பகுதியில் உள்ள தடுப்பு அணைகள், கால்வாய்கள் மற்றும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றனர்.

எங்கள் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக உப்போடை உள்ளது. இந்த ஓடை சேதப்படுத்தப்படுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே எங்கள் பகுதியில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் தனியார் நிறுவனங்கள் சார்பில் காற்றாலைகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். கிராம சபை தீர்மானம் குறித்தும், காற்றாலைகள் அமைப்பதை தடுக்கக்கோரியும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கால்வாய்களை சேதப்படுத்தியதால் எங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் பகுதியில் காற்றாலைகள் அமைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.பிரபு ஆஜரானார்.

முடிவில், வடக்கு இலந்தைகுளம் பகுதியில் காற்றாலைகள் அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்