திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருவேற்காட்டில் திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Update: 2018-09-07 22:45 GMT
பூந்தமல்லி,

திருவேற்காடு அடுத்த மேல்அயனம்பாக்கம் பாடசாலை தெருவை சேர்ந்தவர் சுந்தரவேல் (வயது 26). சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்பு அனுசுயா (23) என்பவரோடு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று காலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு சுந்தரவேல் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாக கதவை தட்டிப்பார்த்தும் அனுசுயா கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது அனுசுயா தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு சுந்தரவேல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுசுயா பட்டப்படிப்பில் தேர்ச்சிபெறாத ஒரு தேர்வை எழுதுவதற்காக கணவர் சுந்தரவேல் பணம் கொடுத்துள்ளார். பின்னர் அதில் இருந்து செலவுக்கு ரூ.100 சுந்தரவேல் வாங்கினார். அதில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த அனுசுயா நேற்று தற்கொலை செய்து கொண்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் திருமணம் ஆகி 2 மாதங்கள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்