மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-09-07 22:54 GMT
வசாய்,

பால்கர் மாவட்டம் டெம்பி-கோவாடே பகுதியை சேர்ந்தவர் ரூபேஷ் பாட்டீல் (வயது26). தொழிலாளி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு அந்த பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவி ஒருத்தியை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

மேலும் ஒருநாள் அவர் மாணவியிடம் ஆபாசமாக எழுதப்பட்ட ஒரு காகிதத்தை கொடுத்து உள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். அவர்கள் ரூபேஷ் பாட்டீலை கண்டித்தனர்.

இருப்பினும் அந்த வாலிபர் கேட்கவில்லை. அந்த ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, அவர் மாணவியின் தோளில் கையை போட்டு அநாகரிகமாக நடந்து உள்ளார். இதனால் பயந்து போன மாணவி வீட்டிற்கு ஓடிச்சென்று பெற்றோரிடம் கூறி அழுதாள்.

அவர்கள் ரூபேஷ் பாட்டீல் மீது போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு நிரூபணமானது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு ரூபேஷ் பாட்டீலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. 

மேலும் செய்திகள்