பாலங்கள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

நாகூர்-நன்னிலம் சாலையில் உள்ள வாய்க்கால்கள் குறுக்கே பாலங்கள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-09-07 23:58 GMT
திட்டச்சேரி,

திருமருகல் ஒன்றியம் அருகே பனங்குடி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள நாகூர்-நன்னிலம் சாலை வழியாக நன்னிலம், கும்பகோணம், மயிலாடுதுறை, வேலூர், விருத்தாசலம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும், தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களும், வாஞ்சூரில் உள்ள தனியார் துறைமுகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

திட்டச்சேரி, திருமருகல் திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டாங்குடி, திருப்புகலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் நாகையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.

தற்போது நாகூர்-நன்னிலம் நெடுஞ்சாலையில் வாய்க்கால்கள் குறுக்கே 5 பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த பாலங்கள் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பு இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்