வைகை அணையில் திறந்து விடப்படும் தண்ணீரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்ப நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில், வைகையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நிரப்புவதற்கு அமைச்சர் மணிகண்டன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Update: 2018-09-08 23:00 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்–அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை வீணாக்காமல் சேமித்து வைத்து பாதுகாப்பாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் கூறியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட முதல்–அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 909 கன அடி, 3 பங்கு அளவாக சிவகங்கை மாவட்டத்திற்கு 390 கனஅடி, 2 பங்கு அளவாக மதுரை மாவட்டத்திற்கு 260 கன அடி தண்ணீர் திறந்து விட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 27–ந் தேதி வரை வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீர் இன்னும் 10 நாட்களில் ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடையும்.

ராமநாதபுரம் பெரிய கண்மாய் கரையின் நீளம் 10 ஆயிரத்து 50 மீட்டராகும். இதன் நீர்ப்பிடி பரப்பளவு 14.50 சதுர கிலோ மீட்டர். மொத்த கொள்ளளவு 618 கன அடி. பெரிய கண்மாய்க்கு மொத்தம் 8 பிரதான மடைகள் உள்ளன. பாப்பாகுடி, கவரன்குளம், களத்தாவூர், அல்லிக்கண்மாய், நொச்சிவயல், கூரியூர் ஆகிய துணை கண்மாய்கள் உள்ளன. 8 பிரதான மடைகள் மற்றும் துணைக் கண்மாய்கள் மூலம் சுமார் 3962.45 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், ராமநாதபுரம் நகர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக பெரிய கண்மாய் உள்ளது.

பெரிய கண்மாயில் இருந்து உபரிநீர் செல்ல காருகுடி கிராமத்தில் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 115.60 மீட்டர் நீளம் கொண்ட கலுங்கு, 24 நீரொளுங்கிகள், 1,013 அடி நீள கலுங்கு, வடகலுங்கு, தென் கலுங்கு ஆகிய கட்டமைப்புகள் உள்ளன. தென் கலுங்கு மூலம் செல்லும் உபரி நீர் சக்கரக்கோட்டை கண்மாயை சென்றடைகிறது. மேலும் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இந்த கட்டமைப்புகள் மூலம் சுமார் 31 ஆயிரத்து 230 கனஅடி உபரி நீர் வெளியேற்றம் செய்து கடலில் கலப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வீணாகாமல் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் சேமித்து, உரிய வழியாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பெரிய கண்மாயின் கரை, மடை கலுங்குகள், நீர்வரத்து கால்வாய் உள்ளிட்ட அனைத்தும் சீரான முறையில் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்து உறுதி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் ரூ.20.51 கோடி மதிப்பீட்டில் மாவட்டத்தில் உள்ள 53 பொதுப்பணித்துறை கண்மாய்களில் கரைகள் பலப்படுத்துதல், மடைகள் மறுகட்டுமானம், கலுங்கு மறுகட்டுமானம் ஆகிய பணிகள் தற்போது சுமார் 80 சதவீதம் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல குடிமராமத்து திட்டத்தின் கீழ் 64 பொதுப்பணித்துறை கண்மாய்களில் ரூ.31.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், பொதுப்பணித்துறை கீழ் வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் வெங்கட கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன், உதவி பொறியாளர் சீனிவாசன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்