விமான கழிவறையில் பதுக்கப்பட்ட ரூ.1½ கோடி தங்க கட்டிகள் மீட்பு

துபாய் விமானத்தின் கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1½ கோடி கடத்தல் தங்க கட்டிகள் மீட்கப்பட்டன.

Update: 2018-09-08 23:27 GMT
மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து பெங்களூரு செல்லும் விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

ஆனால் தங்கம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து அந்த விமானத்தில் ஏறி சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் போது, விமான கழிவறையில் அதிகளவில் தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 5 கிலோ 800 கிராம் எடை கொண்ட அந்த 50 தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 59 லட்சம் ஆகும்.

அந்த தங்க கட்டிகளை கடத்தி வந்த பயணி யார் என்பது தெரியவில்லை. தங்கம் கடத்தலில் ஈடுபட்ட பயணியை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

மேலும் செய்திகள்