ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ரூ.28 லட்சம் மதிப்பில் பகுதிநேர ரேஷன் கடை, புதிய கட்டிடங்கள்

ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ரூ.28 லட்சம் மதிப்பில் பகுதிநேர ரேஷன் கடைகள், புதிய கட்டிடங்களை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்.

Update: 2018-09-11 22:45 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மிடிகிரிப்பள்ளி, சூளகிரி வட்டம் கடத்தூர், தேன்கனிக்கோட்டை வட்டம், கரடிக்கல் ஊராட்சி, திம்மேனட்டி ஆகிய கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓசூர் நகராட்சி மிடுகரப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை, சூளகிரி வட்டம் தொட்டேகவுனிப்பள்ளியில் புதிய அங்கன்வாடி மையம் ஆகியவை ரூ.28 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டிடங்கள், ரேஷன் கடைகள் திறப்பு விழாவுக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு பகுதி நேர ரேஷன் கடைகள் மற்றும் புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசினார். அப்போது பொதுமக்கள் சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் பேசியதாவது:-

ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை ஒன்றியங்களில் 4 கிராமங்களில் பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. திம்மேனட்டி கிராமத்திற்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல்-அமைச்சருக்கு கருத்துரு அனுப்பப்பட்டு ரூ.1.50 கோடி மதிப்பில் சாலை வசதி மற்றும் அங்கன்வாடி மையம் உடனடியாக அமைத்து தரப்படும்.

தொட்டேகவுனிப்பள்ளிக்கு செல்லும் சாலையை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து அரசின் நிதி பெற்று உடனடியாக நிறைவேற்றப்படும். தேன்கனிக்கோட்டை பகுதியில் 2,100 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் 5 ஆயிரம் பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்பு ஏற்படும். இந்த திட்டங்களை பயன்படுத்தி பொதுமக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சுந்தரம், ராதாகிருஷ்ணன், செல்வக்குமார், நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் மகேஷ்குமார், தாசில்தார்கள் முத்துபாண்டி, மிருணாளினி, வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆப்தா பேகம், சுந்தரபாஸ்கர், சீனிவாசன், சரவணபவா, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்