கார்வார் அருகே படகு சேதமடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த 17 மீனவர்கள்

கார்வார் அருகே படகு சேதமடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த 17 மீனவர்களை கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

Update: 2018-09-20 23:43 GMT

மங்களூரு,

உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் தாலுகா பைத்தகோலா மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு படகில் 17 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்கள் துறைமுகத்தில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி படகு சேதமடைந்தது.

இதனால் படகு உள்ளே தண்ணீர் நுழைய தொடங்கியது. இதன்காரணமாக 17 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக மீனவர்கள் கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கடலோர காவல்படையினர் ஒரு கப்பலில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு தாங்கள் வந்த கப்பலில் ஏற்றினார்கள். 17 மீனவர்களை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு வந்து சேர்ந்தனர்.

பின்னர் சேதமடைந்த படகு, மற்றொரு படகு மூலம் கயிறு கட்டி கரைக்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் செய்திகள்