பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாப சாவு கடைக்கு தனியாக செல்ல வேண்டாம் என தாயார் கூறியதால் விபரீத முடிவு

பூச்சி மருந்தை குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-09-21 21:00 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நீண்டதூரம் உள்ள கடைக்கு தனியாக செல்ல வேண்டாம் என தாயார் கூறியதால் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி மாணவி

தூத்துக்குடி தாளமுத்துநகர் சமர்வியஸ் நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களின் மகள் தேசிகா (வயது 18). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 15–ந்தேதி இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கடைக்கு சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டாராம். அதற்கு தனியாக நீண்ட தூரம் உள்ள கடைக்கு செல்ல வேண்டாம் என்று அவரை தாயார் கண்டித்தாராம்.

ஆஸ்பத்திரியில் சாவு

இதனால் மனமுடைந்த தேசிகா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த தாயார் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தாளமுத்துநகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்