101 பயனாளிகளுக்கு ரூ.40.30 லட்சம் மதிப்பில் நல உதவிகள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சத்து 30 ஆயிரத்து 820 மதிப்பில் நல உதவிகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.

Update: 2018-09-21 23:30 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 101 பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சத்து 30 ஆயிரத்து 820 மதிப்பில் மூன்று சக்கர வாகனம், தையல் எந்திரங்கள், திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உதவி தொகைக்கான காசோலைகளை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர், தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ் (ஊத்தங்கரை), சி.வி.ராஜேந்திரன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசியதாவது:-

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். தற்போது அவர் வழியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இன்றைய தினம் நமது மாவட்டத்தை சேர்ந்த 58 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சத்து 12 ஆயிரத்து 720 மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் வாகனமும், 30 பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 100 மதிப்பிலான தையல் எந்திரம், 9 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் திருமண உதவித்தொகையும், 4 பயனாளிகளுக்கு ரூ. 68 ஆயிரம் மதிப்பிலான நல உதவி தொகை என மொத்தம் 101 பயனாளிகளுக்கு ரூ. 40 லட்சத்து 30 ஆயிரத்து 820 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 37,519 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித்தொகையாக 22 பேருக்கு ரூ. 9.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2018-19 நிதியாண்டில் சுய உதவி தொழில் புரியும் 30 பேருக்கு சிறு மற்றும் குறு தொழில் வங்கி கடன் மானியமாக ரூ. 6.96 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

நலவாரிய உதவித்தொகையாக இயற்கை மரணம், ஈமசடங்கு, விபத்து மரணம் ஆகியவை மொத்தம் 47 பேருக்கு ரூ. 6.68 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு வழங்கும் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், முன்னாள் பால்வள தலைவர் தென்னரசு, முன்னாள் நகர்மன்ற தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, முன்னாள் துணை தலைவர் வெங்கடாசலம், சூளகிரி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஹேம்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்