சேலம்: 25-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம்: மேடை அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா

சேலத்தில் 25-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. இதையொட்டி மேடை அமைக்கும் பணிக்காக கால்கோள் விழா நேற்று நடந்தது.

Update: 2018-09-21 23:30 GMT
சேலம்,

ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து வருகிற 25-ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த பொதுக்கூட்டம் அமைப்பதற்கான கால்கோள் விழா நேற்று காலை கோட்டை மைதானத்தில் நடந்தது. விழாவுக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேடை அமைக்கும் பணிக்கான கால்கோளை ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. நட்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் துணை மேயர் நடேசன், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம், மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.எஸ்.எம். பாலு, கூட்டுறவு சங்க தலைவர்கள் துரைராஜ், கே.சி.செல்வராஜ், ராமராஜ், அய்யந்துரை, முன்னாள் கவுன்சிலர்கள் கிருபாகரன், அசோக்குமார் மற்றும் மாமாங்கம் செங்கோட்டையன், மாநகர், மாவட்ட மீனவர் அணி பிரிவு செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 25-ந் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரத்திற்கு வருகிறார். பின்னர் அவர் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டம் மற்றும் மாநகர போலீஸ் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்