நடிகர் கருணாஸ் சர்ச்சை பேச்சு: பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தால் அரசு நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

நடிகர் கருணாஸின் சர்ச்சை பேச்சு தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவித்தால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-21 22:53 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பிரமாண்டமான கோட்டை வடிவிலான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை நேற்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில செயலாளர் தமிழ்மகன் உசேன், குமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், ஜாண்தங்கம் ஆகியோரும் உடன் சென்றனர். அப்போது அமைச்சர்கள் விழா பந்தலில் செய்யப்பட்டுள்ள வசதிகளையும் பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. பால் கூட்டுறவு சங்க தேர்தல்களிலும் அ.தி.மு.க.வுக்கு 90 சதவீத வெற்றி கிடைத்துள்ளது. பொது இடங்களில் மக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற விதத்தில் பேசுகின்றவர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்ற வகையில் கருணாஸ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசு உத்தரவு பேரில் தான் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறது. அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தை அணுகும் போது, நீதிமன்ற உத்தரவுபடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்குவதில்லை.

ஜெயலலிதா மறைந்து விட்டாலும் அவர் சொன்ன திட்டங்களையெல்லாம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு துறைகள் மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளன. இதெல்லாம் இந்த ஆட்சி சிறந்த ஆட்சி என்பதற்கு சாட்சி.

தொழில்துறை தொடர்பாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் அரசியலை புரிந்து கொள்ளாமல், எந்த கருத்தையும் தெரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்த பிறகு தான் உலக தொழிலாளர்கள் மாநாட்டை முதன் முதலாக நடத்திக் காட்டினார். தமிழகத்தில் மின்தட்டுப்பாடு இல்லை. தொழில்துறையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பதில் தெரிவித்து, அவருடைய சவாலையும் ஏற்றுள்ளார். அதற்கு மு.க.ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும், யார் மீதும் கூறலாம். ஆனால் அவரால் நிரூபிக்க முடியாது. 2016-ம் ஆண்டு தேர்தலில் முதல்-அமைச்சராக ஆகிவிடலாம் என அவர் கனவு கண்டார். அது நிராசையாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஏதாவது பிளவு ஏற்பட்டு ஆட்சி மாற்றம் வராதா? என அவர் கனவு காண்கிறார். மக்கள் பணிகளை செய்ய ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அவர் கூறவும் இல்லை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக செயல்படவும் இல்லை.

ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று சாதனை வெற்றியை அ.தி.மு.க. பெற்றது. அவருடைய வழியில் மக்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறும்போது, “களக்காடு பகுதியில் ஆடுகள் பலியான சம்பவம் பற்றி அறிந்ததும் அங்கு கால்நடைத்துறையின் 5 டாக்டர்கள் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நோய் பரவாமல் தடுக்க 3500 ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது“ என்றார்.

மேலும் செய்திகள்