கல்லூரி மாணவியை இரண்டாவது திருமணம் செய்ய முயன்றவர் கைது

கல்லூரி மாணவியை இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற வாலிபரை, அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-22 22:00 GMT
அடையாறு,

சென்னை பெரம்பூர் மடுமாநகரை சேர்ந்தவர் சூசை ஆரோக்கியம் (வயது 27). இவருக்கு திருமணமாகி ஷாலினி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்,

கடந்த சில தினங்களாக சூசை ஆரோக்கியம், மனைவியை அடித்து துன்புறுத்தியதாகவும், தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாகவும் மிரட்டி வந்தார். கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஷாலினி, அவரை ரகசியமாக கண்காணித்து வந்தார்.

அப்போது, சூசை ஆரோக்கியம் ஒரு கல்லூரி மாணவியுடன் பழகுவதும், அவருடன் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிவதும் தெரிய வந்தது. மேலும், அந்த மாணவியை திருவான்மியூரில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதும் தெரியவந்தது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஷாலினி, திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூசை ஆரோக்கியத்தை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், ஏற்கனவே திருமணமானதை மறைத்து சைதாப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவியை இரண்டாவதாக திருமணம் செய்ய இருந்ததை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து சூசைஆரோக்கியத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்