போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

விக்ரோலியில் போலீஸ்காரரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-10-05 22:33 GMT
மும்பை,

மும்பை விக்ரோலி பகுதியில் சமீப காலமாக அதிகளவில் நகைப்பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுத்து, நகைப்பறிப்பு திருடர்களை பிடிக்க விக்ரோலி, கோதரேஜ் சோப் கேட் பகுதியில் போலீசார் சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அதன்படி போலீசார் சம்பவத்தன்று காலை அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை போலீஸ்காரர் சேட்டன் ராஜ்புத் மறித்தார்.

ஆனால் அதில் வந்த வாலிபர்கள் போலீஸ்காரர் மீது மோட்டார் சைக்கிளை மோதினர். மேலும் வழியை மறித்ததற்காக அந்த வாலிபர்கள் போலீஸ்காரரை தாக்கினர். இந்தநிலையில் அங்கு இருந்த மற்ற போலீசார், போலீஸ்காரரை மீட்டு அந்த 2 வாலிபர்களையும் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கோவண்டி பகுதியை சேர்ந்த முகமது சேக் (வயது24), முகமது செய்யது (25) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வாலிபர்கள் திருட்டு சம்பவங்களில் ஏதாவது ஈடுபட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்