சமயபுரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த போது பரிதாபம்

சமயபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி, லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-10-21 22:00 GMT
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள நடு இருங்களூரை சேர்ந்தவர் வேணுகோபால். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் கிருத்திகா(வயது 19). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று துறையூரில் உள்ள அவருடைய தோழி வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிருத்திகா கலந்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக அங்கிருந்து பஸ்சில் நம்பர் 1 டோல்கேட்டிற்கு வந்தார்.

அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே அவர் நின்றபோது, டோல்கேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அவருடைய உறவினர் முருகன் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார். கிருத்திகாவை பார்த்ததும் அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். இதையடுத்து கிருத்திகா, முருகனின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து நடு இருங்களூருக்கு சென்றார்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் டோல்பிளாசா பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே சென்றபோது, கிருத்திகா நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது திருச்சியில் இருந்து சென்னைக்கு அட்டைப் பெட்டிகளை ஏற்றி சென்ற லாரியின் சக்கரத்தில் அவர் சிக்கினார். இதில் அவருடைய தலை மீது லாரியின் சக்கரம் ஏறியதில் மூளை சிதறி அவர் சம்பவ இடத்திலேயே கிருத்திகா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் விருதுநகர் அருகே உள்ள பரங்கிநாதபுரத்தை சேர்ந்த முனிராஜ்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்