மருத்துவமனை பாடாலூருக்கு இடமாற்றம்: அரசாணையை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

அரசு மருத்துவமனையை பாடாலூருக்கு இடமாற் றம் செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-10-22 22:45 GMT
பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனைசெயல்பட்டு வந்தது. அந்த மருத்துவமனையை வட்டார மருத்துவமனையாக தமிழக அரசு அறிவித்தது.

பின்னர் தேசிய நெடுஞ் சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்க வசதியாக இருக்கும் என்பதற்காக வட்டார மருத்துவமனையை பாடாலூருக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டியும், தொடர்ந்து காரையில் மருத்துவமனை செயல்பட வலியுறுத்தியும் காரை பஸ் நிறுத்தம் பகுதியில் அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காரை கிராமத்தில் அரசு மருத்துவமனை தொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் அங்கு விரைந்து வந்து, காரையில் அரசு மருத்துவமனை தொடர்ந்து செயல் படும். அதற்கு தேவையான பணியிடங்கள் ஓரிரு மாதங்களில் நிரப்பப்படும். அதன் பின்னர் அனைத்து சேவைகளும் முழுமையாக அளிக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்