ஊ.மங்கலம் அருகே: மோட்டார் சைக்கிள்கள் மோதல் - வாலிபர் பலி

ஊ.மங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-10-22 21:30 GMT
மந்தாரக்குப்பம், 

ஊ.மங்கலம் அருகே மேற்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் வீரசேகர்(வயது 20). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான அதேஊரை சேர்ந்த சம்பத்(20), குழந்தைவேல்(27), விஜயகுமார்(23) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்துக்கு புறப்பட்டார்.

மோட்டார் சைக்கிளை வீரசேகர் ஓட்டினார். ஊ.மங்கலம் அடுத்த அதியமான்குப்பம் கிராம சாலையில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், வீரசேகர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வீரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பத், குழந்தைவேல், விஜயகுமார் மற்றும் எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இருப்பு கிராமத்தை சேர்ந்த சிவக்குமார்(25) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.
இதைபார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பலத்த காயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான வீரசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்