நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கை

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

Update: 2018-10-22 22:45 GMT
வேதாரண்யம்,

நடுக்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் நாகை, காரைக்கால், ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து சென்று சிறையில் அடைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிறைபிடிக்கப்படும் மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தாலும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை.

இதனால் தமிழக மீனவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையின் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரக கப்பலில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 5 பேரை சிறைபிடித்து இலங்கையின் காரைத்தீவு கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற தகவல் தெரியவில்லை.

இது குறித்து கடலோர காவல் படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்