முத்துப்பேட்டை அருகே தடுப்புச்சுவரில் அரசு பஸ் மோதியது பயணிகள் உயிர் தப்பினர்

முத்துப்பேட்டை அருகே அரசு பஸ் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2018-11-04 22:45 GMT
முத்துப்பேட்டை,

சென்னையில் இருந்து ராமேசுவரத்துக்கு அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. இந்த பஸ்சை சென்னையை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஓட்டினார்.

கிழக்கு கடற்கரை சாலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோவிலூர் பகுதியில் அந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அப்பகுதியில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தினார். இதனால் கவிழும் அபாயத்தில் இருந்து பஸ் தப்பியது. அதில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து பஸ்சின் டிரைவர் நாகப்பட்டினம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நாகையில் இருந்து வேறு ஒரு பஸ் விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் மூலம் பயணிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். விபத்துக்குள்ளான பஸ், கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்