லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: சிறுவன் பலி; வாலிபர் படுகாயம்

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சிறுவன் பலியானர். மேலும் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-11-04 22:45 GMT
பெரியகுளம்,

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுடைய மகன் மித்ரன் (வயது 2½). நேற்று முன்தினம் மித்ரன் அழுது கொண்டிருந்தான். எனவே ராஜலட்சுமியின் தம்பி ராகவன்(22) அவனை மோட்டார் சைக்கிளில் முன்னால் உட்கார வைத்துக்கொண்டு பெரியகுளத்திற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். தாமரைக்குளம் பிரிவு அருகே வந்தபோது முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென நின்றது. இதனால் ராகவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் ராகவன் மற்றும் மித்ரன் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், மித்ரன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். ராகவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்