கணவரை கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய பெண் கைது

தகானுவில், கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

Update:2018-11-06 02:38 IST
வசாய், 

பால்கர் மாவட்டம் தகானுவை சேர்ந்தவர் உமேஷ் பாரி(வயது35). இவரது மனைவி ஷில்பா(30). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உமேஷ் பாரிக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினசரி குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார்.

இந்தநிலையில், கடந்த 2-ந்தேதி இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி கைது

ஷில்பாவிடம் விசாரித்தபோது, அவர் திடீரென இறந்து விட்டதாக தெரிவித்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் போலீசார் சந்தேகத்தின் பேரில் ஷில்பாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

இதில், அவர் தான் கணவரை கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் குடித்து விட்டு துன்புறுத்தி வந்ததால் கயிற்றால் கணவரின் கழுத்தை நெரித்து கொன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஷில்பாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்