சர்கார் படம் பார்த்துவிட்டு திரும்பிய விஜய் ரசிகர்கள் 2 பேர் விபத்தில் பலி

புஞ்சைபுளியம்பட்டி அருகே சர்கார் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய விஜய் ரசிகர்கள் 2 பேர் புஞ்சைபுளியம்பட்டி அருகே நடந்த விபத்தில் இறந்தார்கள்.

Update: 2018-11-08 00:30 GMT
புஞ்சைபுளியம்பட்டி,

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்தவர் முத்துக்குமார். அவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 18). கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் என்பவருடைய மகன் சித்திக் (18). கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இருவரும் விஜய் ரசிகர்கள். அதனால் தீபாவளி அன்று முதல் காட்சியிலேயே விஜய் நடித்த சர்கார் படம் பார்க்க முடிவு செய்தார்கள்.

அதன்படி நேற்று முன்தினம் தீபாவளி அன்று, புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு தியேட்டரில் காலை 6 மணி காட்சி பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் இருவரும் சென்றார்கள். படம் பார்த்துவிட்டு 9.45 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தார்கள். புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் மாதேஸ்வரன் கோவில் பகுதியில் சென்றபோது எதிரே வந்த லாரியும், மோட்டார்சைக்கிளும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த தினேஷ்குமாரும், சித்திக்கும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டதும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் வைத்திருந்த தினேஷ்குமார், சித்திக்கின் உடல்களை பார்த்து அவர்களுடைய பெற்றோர்கள் கதறி துடித்தது பார்ப்பவர்களையும் கண்கலங்க செய்தது.

மேலும் செய்திகள்