மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாயில் மீண்டும் உடைப்பு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு 20 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-11-16 22:30 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டம் 15 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை கச்சேரி சாலை, சின்னக்கடைத்தெரு, காந்திஜிசாலை, அண்ணாவீதி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ‘கஜா’ புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மயிலாடுதுறையில் உள்ள தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, 20 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு சாலை உள்வாங்கியது. அப்போது பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை உதவி கலெக்டர் தேன்மொழி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். உடனடியாக உடைப்பை சரி செய்ய மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தடுப்பு அமைத்து, பாதாள சாக்கடை குழாயை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி பாதாள சாக்கடை பணியில் அனுபவமிக்க தொழில் வல்லுனர்கள் சேலத்தில் இருந்து வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு 20 அடி ஆழத்திற்கு சாலை உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்