கார் மோதி படுகாயமடைந்த கூட்டுறவு சங்க முன்னாள் துணைத்தலைவர் சாவு டிரைவர் கைது

கயத்தாறு அருகே கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த கூட்டுறவு சங்க முன்னாள் துணை தலைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-11-20 21:45 GMT
கயத்தாறு, 

கயத்தாறு அருகே கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த கூட்டுறவு சங்க முன்னாள் துணை தலைவர் பரிதாபமாக இறந்தார். கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கூட்டுறவு சங்க...

கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 51). விவசாயியான இவர் கயத்தாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் துணை தலைவர். இவர் சம்பவத்தன்று இரவில் ராஜாபுதுக்குடி விலக்கு பகுதியில் நாற்கர சாலையோரமாக நின்று, உறவினரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது நெல்லை மாவட்டம் பணகுடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் எதிர்பாராவிதமாக அவர் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவர் கைது

இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிச் சென்ற பணகுடியைச் சேர்ந்த முருகேசன் மகன் சுதீஷை (35) கைது செய்தார்.

விபத்தில் இறந்த கணேசனுக்கு அக்னியம்மாள், பேச்சியம்மாள் ஆகிய 2 மனைவிகளும், மகேஷ் (27), சிவகுமார் (25), விக்னேஷ் (23), சிவன்பெருமாள் (21), சிவகுமார் (20), மகாராஜா (12) ஆகிய 6 மகன்களும், முத்துலட்சுமி (24), கீர்த்திகா (18) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்