வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜர்

வழக்கு விசாரணைக்காக பேராசிரியை நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

Update: 2018-11-20 23:30 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் தன்னிடம் படித்த மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 3 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்கள்.

அவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

3 பேரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்றும், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் தனித்தனியே மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களுக்கு சி.பி.சி.ஐ.டி. தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அதற்காக நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் பலத்த பாதுகாப்போடு போலீசார் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

மனுக்களை விசாரித்த நீதிபதி லியாகத் அலி, விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து 3 பேரும் மீண்டும் மதுரை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்