நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற சரக்கு வேனில் இளநீரை அனுப்பி வைத்த கிராம மக்கள்

புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்ற சரக்கு வேனில் இளநீரை கிராம மக்கள் அனுப்பி வைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2018-11-20 22:45 GMT
திருச்சி,

‘கஜா‘ புயலால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலால் சேதமடைந்த பகுதிகளில் நிவாரண பொருட்களை அரசு மற்றும் அரசியல் கட்சியினரும், பல்வேறு தரப்பினரும், தன்னார்வலர்களும் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தங்களால் முடிந்த நிவாரண பொருட்களை சேகரித்தனர்.

உணவு பொருட்கள், நாப்கின், கொசுவர்த்தி உள்பட அத்தியாவசிய பொருட்களை சரக்குவேனில் புதுக்கோட்டைக்கும், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்துக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நாடியம் கிராமத்தில் நிவாரண பொருட்களை கொடுத்த பின்பு அந்த சரக்கு வேன் காலியாக திருச்சிக்கு புறப்பட தயாரானது.

இளநீர்

இதனை பார்த்த அப்பகுதி கிராம மக்கள், தங்களுக்கு நிவாரண பொருட்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தை வெறுமனே காலியாக அனுப்ப அவர்களுக்கு மனமில்லை. இதனால் எங்களது தோட்டத்து இளநீர்களை கொண்டு செல்லுங்கள் எனக்கூறினர். சொன்னதோடு மட்டுமல்லாமல் தோட்டத்தில் சரிந்து கிடந்த தென்னை மரங்களில் இருந்த இளநீர்களை பறித்து அந்த வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர். நிவாரண பொருட்கள் கொண்டு சென்றவர்களுக்கு இளநீரை கிராம மக்கள் பரிசாக அளித்தது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. புயல் பாதித்த நிலையிலும் கிராம மக்களின் அன்பை கண்டு பலரும் நெகிழ்ந்தனர். இது குறித்து சமூகவலைத்தளங்களில் சரக்கு வேனில் இளநீர் குவியலாக இருப்பது போன்ற புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அந்தப்பகுதி மக்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்