சேலம் அருகே மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை சாவு

சேலம் அருகே மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2018-11-21 22:00 GMT
சேலம், 

சேலம் அருகே உள்ள வாழப்பாடி எம்.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பு, பெயிண்டர். இவர்களுடைய மகன் இன்பன் (வயது 2). கடந்த 19-ந் தேதி வீட்டில் அன்புவின் மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார். அங்கு இன்பன் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது குழந்தை சமையல் அறையில் பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை எடுத்து குடித்து விட்டது. பின்னர் மயங்கி கிடந்த குழந்தையை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி இன்பன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தான். குழந்தையை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘வீட்டில் மண்எண்ணெயை குழந்தைக்கு எட்டும் தூரத்தில் வைத்ததால், அதை எடுத்து குடித்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்‘ என்றனர்.

மேலும் செய்திகள்