பெரம்பலூர்-அரியலூரில் சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், அரியலூரில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-11-21 23:00 GMT
பெரம்பலூர்,

கேரளாவில் சபரிமலை அய்யப்பன் பக்தர்கள் தாக்கப்படுவதையும், சட்ட விரோதமாக பக்தர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதையும் கண்டித்து பெரம்பலூர் ஸ்ரீ சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த வக்கீலுமான பிரசன்னம் தலைமை தாங்கினார். சாமி.இளங்கோவன் முன்னிலை வகித்தார். திருச்சி இல.கண்ணன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அய்யப்ப குருசாமிகள் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இருமுடி கட்ட மாட்டோம் என்றும், 50 வயதுக்குட்பட்ட பெண்கள் நாங்கள் 50 வயது வரை அய்யப்பனை மனதால் வீட்டில் வழிபடுவோம். எந்த நிலையிலும் முன்னோர்கள் வகுத்த பாரம்பரியத்தை மீற மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்து கொண்டனர். இதில் அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

இதே போல அரியலூர் அண்ணா சிலை அருகே ஸ்ரீ சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்