சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் கட்டிடம் கட்ட 75 சதவீத மானியத்தில் நிதி உதவி - கலெக்டர் தகவல்

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில், கட்டிடம் கட்ட 75 சதவீத மானியத்தில் நிதி உதவி அளிக்கப்படும் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-21 23:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் கட்டிடம் கட்டுவதற்கு 75 சதவீதம் மானியத்தில் நிதி உதவி அளிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினர் குழந்தைகளின் கல்வி வசதிகளை மேம்படுத்திட சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி சிறுபான்மையினர் அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடம், அறிவியல் ஆய்வுக்கூடம், நூலகம், கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர், மகளிர் விடுதி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகள் கோரும் மதிப்பீட்டு தொகையில் 75 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இந்த வகையில் ரூ.50 லட்சத்துக்கு மிகாமல் மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. மீதம் உள்ள 25 சதவீதத்தை கல்வி நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள அனைத்து சிறுபான்மையினர் நல கல்வி நிறுவனங்கள், சிறுபான்மையினர் சான்றிதழ், பள்ளிப்பதிவு சான்றிதழ், டிரஸ்ட் பதிவு சான்றிதழ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திடட மதிப்பீடு சான்றிதழ் ஆகியவற்றின் முழு விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை www.mh-rd.gov.in/id-mi என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பங்கள் மாநில அளவிலான குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். ஒரு கல்வி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்