கபிஸ்தலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

கபிஸ்தலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2018-11-21 22:15 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மருத்துவக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் அன்பழகன். தொழிலாளி. இவருடைய மனைவி சாலினி (வயது28). இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகின்றன. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் சாலினி தூக்குப்போட்டு கொண்டார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாலினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாலினியின் தாய் மணல்மேடு பகுதியை சேர்ந்த செந்தாமரை(58) கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் தூக்குப்போட்டு கொண்டதற்கு வரதட்சணை கொடுமை காரணம் என செந்தாமரை கூறி உள்ளார்.

உதவி கலெக்டர் விசாரணை

அதன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சாலினிக்கு திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால், அவருடைய சாவுக்கு காரணம் என்ன? என்பது பற்றி கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்