பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கு: 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை

பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2018-11-22 21:45 GMT
திருப்பூர், 

திருப்பூர் சூசையாபுரம் பகுதியை சேர்ந்தவர் லதா(வயது 36). இவருடைய கணவர் பிரபு(வயது 37). பனியன் நிறுவன தொழிலாளி. கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் பிரபுவுக்கு தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

இதை தட்டிக்கேட்ட மனைவி லதாவை தொடர்ந்து அடித்து உதைத்து துன்புறுத்தி வந்தது மட்டுமின்றி, கொலை மிரட்டலும் விடுத்து வந்துள்ளார். இதை பிரபுவின் தந்தை வெங்கடாசலம் மற்றும் தாய் பாப்பாள் ஆகியோர் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளனர். மேலும், பிரபுவிற்கு உறுதுணையாக இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் 3 பேர் மீதும் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்படி விசாரணை நடத்திய போலீசார், பிரபு மற்றும் அவரின் பெற்றோர் வெங்கடாச்சலம் மற்றும் பாப்பாள் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழகுப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்.1 கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கவியரசன் குற்றம் சாட்டப்பட்ட பிரபு மற்றும் அவருடைய பெற்றோரான வெங்கடாசலம் மற்றும் பாப்பாள் ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

மேலும் செய்திகள்