ஊதியூர் அருகே: கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் கைது

ஊதியூர் அருகே கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2018-11-22 22:00 GMT
காங்கேயம், 

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த ஊதியூர் அருகே உள்ள தாளக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் தனசேகரன்(வயது 21). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் தனசேகரன் அதே ஊரை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை கடத்தி சென்று விட்டதாக மாணவியின் தந்தை ஊதியூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் தனசேகரனையும், அந்த கல்லூரி மாணவியையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தனசேகரன், கல்லூரி மாணவியுடன் ஊட்டியில் இருந்து பல்லடத்துக்கு வருவதாக மாணவியின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் பல்லடத்தில் மாணவியின் உறவினர்கள் காத்திருந்தனர். ஊட்டியில் இருந்து கல்லூரி மாணவியுடன் பல்லடம் வந்த தனசேகரன், மாணவியின் உறவினர்கள் நிற்பதை பார்த்து அவரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தாராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் தனசேகரன் பிடிபட்டார். அவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்