திண்டுக்கல் அருகே 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் அருகே, 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-11-24 23:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலைபுதூரை அடுத்த பசலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பாண்டி என்ற பாலு. விவசாயி. அவருடைய மனைவி செல்லம்மாள் (வயது 28). இவர்களுக்கு பொன்னர் (6), பெரியக்காள் (2) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். பொன்னர், அங்குள்ள பள்ளிக் கூடத்தில் முதலாம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில நாட்களாக பாலு-செல்லம்மாள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உறவினர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் சமரசம் செய்து வைத்துள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால் மனம் உடைந்த செல்லம்மாள், தனது குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து நேற்று காலை 2 குழந்தைகளை அந்த பகுதியில் உள்ள தங்களுடைய தோட்டத்துக்கு அழைத்து சென்றார்.

அப்போது விரக்தியின் உச்சத்தில் இருந்த அவர், தான் பெற்றெடுத்த குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களை கொல்வதற்கு துணிந்தார். இதையடுத்து இதயத்தை இரும்பாக்கி கொண்டு குழந்தைகளை தூக்கி கிணற்றில் வீசினார். பின்னர் அவரும் தற்கொலை செய்வதற்காக கிணற்றில் குதித்தார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். அப்போது 3 பேரும் கிணற்றில் மூழ்கி கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர். இதைத்தொடர்ந்து கிணற்றில் குதித்து 3 பேரையும் மீட்க பொதுமக்கள் முயன்றனர். ஆனால், குழந்தைகள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். லேசான காயத்துடன் செல்லம்மாள் மீட்கப்பட்டார். மேலும் பலியான 2 குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டன. குழந்தைகளின் உடல் களை பார்த்து செல்லம்மாள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலைக்கு முயற்சியில் காயம் அடைந்த செல்லம்மாள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் அரளிக்காய்களை அரைத்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, அவரும் தின்றுள்ளார். அதன்பிறகே குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு, தானும் குதித்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் சிறுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்