இரும்பு வியாபாரி தற்கொலை: திருச்சி அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திருச்சியில் தற்கொலை செய்து கொண்ட இரும்பு வியாபாரியின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்கள்.

Update: 2018-11-29 23:00 GMT
திருச்சி,

திருச்சி வடக்குதாராநல்லூர் காமராஜ்நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது 57). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவருடைய வீட்டுக்கு எதிரே குடியிருந்து வருபவர் ரெங்கராஜ். இவரும், இவருடைய மனைவி மனோரஞ்சிதமும் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் துப்புரவு பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் வீட்டின் அருகே உள்ள சாக்கடையில் கழிவுநீர் செல்வது தொடர்பாக ரெங்கராஜ் குடும்பத்தினருக்கும், மனோகரன் குடும்பத்துக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் இது தொடர்பான மோதல் குறித்து ரெங்கராஜின் மனைவி மனோரஞ்சிதம் காந்திமார்க்கெட் போலீஸ் நிலையத்தில் தன்னை சிலர் தாக்கியதாக புகார் அளித்தார். அதன்பேரில் காந்திமார்க்கெட் போலீசார் மனோகரனின் குடும்பத்தினரான அய்யப்பன், சுகன்ராஜ், வீரராஜ், சரண்யா ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அய்யப்பன், சுகன்ராஜை கைது செய்தனர். குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் மனோகரன் மனவேதனை அடைந்தார். நேற்று முன்தினம் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மனோகரன் எழுதி வைத்து இருந்த கடிதத்தில், “என் பெயரை சொன்னால் நல்ல மனிதர், நல்ல குடும்பம் என்று பெயர் எடுத்துள்ளேன். ஆனால் சாதாரண சாக்கடை பிரச்சினையை கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதிந்து எனது குடும்பத்தினரை இழிவுபடுத்தி விட்டார்கள். ஆகவே ஒரு பாவமும் செய்யாத எனது குடும்பத்தினரை விடுதலை செய்ய வேண்டும். எங்கள் மீது வீண்பழி சுமத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து மனோகரன் உடல் திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அரங்கில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை அங்கு வந்த உறவினர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மனோகரனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு வந்த கோட்டாட்சியர் அன்பழகன், மேற்குதாசில்தார் ராஜவேலு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம், ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மனோகரன் குடும்பத்தினர் மீது போட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும். உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் உள்ளிட்டோர் கூறினர்.

பின்னர் போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், கோட்டாட்சியர் அன்பழகன் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் நியமிக்கப்பட்டுள்ளார். உரிய விசாரணை நடத்தி 2 நாட்களில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்த மனோகரனின் குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். விசாரணையில், மனோகரன் குடும்பத்தினர் மீது பொய் புகார் கொடுத்ததாக தெரியவந்தால் அவர்கள் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று மாலை உடலை பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்