தூசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை - பணம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை

தூசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை - பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-12-06 23:00 GMT
தூசி, 

தூசி அருகே உள்ள கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தசரதன். இவரது மனைவி ஜோதி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவரை இழந்த ஜோதி தனது மாமனார்-மாமியாருடன் வசித்து வருகிறார். ஜோதி அந்த பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஜோதி வேலைக்கு சென்றுள்ளார். அவரது குழந்தைகள் பள்ளிக்கு சென்று உள்ளனர். மாமனார், மாமியார் இருவரும் வெளியூர் சென்று இருந்தனர்.

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய ஜோதி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.4¼ லட்சம் ஆகும்.

இந்த சம்பவம் குறித்து ஜோதி தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்