டாஸ்மாக் கடைக்குள் புகுந்து: திருட முயன்றவர்களை தடுத்த ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு -பழனி அருகே பரபரப்பு

பழனி அருகே, டாஸ்மாக் கடைக்குள் புகுந்து திருட முயன்றவர்களை தடுத்த ஊழியர்கள் அரிவாளால் வெட்டப்பட்டனர்.

Update: 2018-12-06 21:45 GMT
கீரனூர், 

பழனியை அடுத்த கந்தப்பகவுண்டன்வலசு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், அலங்கியம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 40), ஆயக்குடியை சேர்ந்த கிருஷ்ணராஜ் (40) ஊழியர்களாக உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டாஸ்மாக் கடையை மூடினர்.

பின்னர் மூர்த்தியும், கிருஷ்ணராஜூம் டாஸ்மாக் கடை அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது டாஸ்மாக் கடைக்குள் மர்ம நபர்கள் நுழைந்து, மதுபாட்டில்களை திருட முயன்றனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

உடனே டாஸ்மாக் கடைக்கு ஓடிச்சென்ற ஊழியர்கள் இருவரும், மர்ம நபர்களை தடுக்க முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மூர்த்தியையும், கிருஷ்ணராஜையும் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

இதில் மூர்த்தி, கிருஷ்ணராஜ் ஆகியோருக்கு கால் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடை ஊழியர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்