சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது கவர்னர் கிரண்பெடி கருத்து

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கவர்னர் கிரண்பெடி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-06 22:22 GMT
புதுச்சேரி,

புதுவை சட்டசபைக்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவை சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த 3 எம்.எல்.ஏ.க்களும் பல்வேறு சிக்கலான சூழ்நிலையிலும் பொறுமையாகவும், உறுதியுடனும் இருந்து இந்த தீர்ப்பினை பெற்றுள்ளனர். இறுதியாக சட்டம் வென்றுள்ளது. அவர்கள் இப்போது புதுவையின் வளர்ச்சிக்காக சேவையாற்றலாம். இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் நிருபர்கள் கருத்துகேட்டபோது, தீர்ப்பின் முழு விவரமும் வரட்டும். அதன்பின் கருத்து கூறுகிறேன் என்றார். அதேபோல் சபாநாயகர் சொல்வதுதான் தனது கருத்து என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்