நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 175 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-12-10 22:15 GMT
நாமக்கல், 

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரே அரசாணையின் மூலம் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு முழு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அடிப்படை கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 311 கிராம நிர்வாக அலுவலர்களில் 175 பேர் கலந்து கொண்டனர். இதனால் கிராம நிர்வாக அலுவலகங்களில் தினசரி நடைபெறும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதையொட்டி கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த தாசில்தார்களிடம் கோரிக்கை மனுவையும் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்