பெற்றோர் வசதியாக இருந்தாலும் கணவரிடம் ஜீவனாம்சம் பெற பெண்ணுக்கு உரிமை உண்டு - ஐகோர்ட்டு உத்தரவு

பெற்றோர் வசதியாக இருந்தாலும் கணவரிடம் ஜீவனாம்சம் பெற பெண்ணுக்கு உரிமை உண்டு என மும்பை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

Update: 2018-12-16 00:17 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தொழில் அதிபரான கணவரை பிரிந்து வாழ்கிறார். இந்தநிலையில், பிரிந்த கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது கணவரின் தரப்பில், பெண் பிரெஞ்சு ஆசிரியராக பணியாற்றி மாதம் ரூ.30 ஆயிரம் சம்பாதிப்பதாகவும், மேலும் பெண்ணின் பெற்றோர் பணக்காரர்கள். சொந்த வீடு உள்ளது. அதிகளவு நகைகள் உள்ளது. எனவே பெண்ணிற்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மகேஷ் சோனக், பெண்ணிற்கு மாதம் ரூ.75 ஆயிரம் ஜீவனாம்சமாக வழங்குமாறு அவரது பிரிந்த கணவருக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவு குறித்து நீதிபதி கூறியதாவது:-

பெண்ணின் பெற்றோர் பணக்காரர்களாக உள்ளனர் என்பதற்காக கணவர் அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க முடியாது என கூறமுடியாது. பெற்றோர் வசதியாக இருந்தாலும் பிரிந்து சென்ற கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற பெண்ணுக்கு உரிமை உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்