நீர்ப்பிடிப்பு கால்வாய் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியை கைவிடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கருங்கல்மேடு கிராமத்தில் தார்சாலை அமைக்கும் பணியை கைவிடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-20 22:45 GMT
நல்லம்பள்ளி, 

நல்லம்பள்ளி அடுத்த சாமிசெட்டிப்பட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட கருங்கல்மேடு கிராமத்தில் இருந்து கன்டியான்கொட்டாய் வரை ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்பாசன கால்வாய் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியை கைவிடக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்தநிலையில், நேற்று தாசில்தார் பழனியம்மாள், மண்டல துணை தாசில்தார் ரமேஷ் மற்றும் தொப்பூர் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் தலைமையில் போலீசார், வருவாய்த்துறையினர் தார்சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளவீடு செய்யும் இடத்தில் திரண்டனர். பின்னர் நீர்ப்பிடிப்பு கால்வாய் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணியை கைவிடக்கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீர்வழிப்பாதை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து தார்சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டால் குடும்பத்தினருடன் கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியை பாதியில் நிறுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்