பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மன்னார்குடி அருகே பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-20 22:45 GMT
சுந்தரக்கோட்டை,

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக்கோரி மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் நேற்று பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், மன்னார்குடி தாசில்தார் லட்சுமிபிரபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இன்னும் 3 நாட்களில் நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-மதுக்கூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்