பஸ்சை வழிமறித்து மாணவ-மாணவிகளை தாக்கிய வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவ-மாணவிகளை தாக்கிய வழக்கில் சரண் அடைந்த வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2018-12-20 22:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள தோப்படைப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கு அரசு பஸ்சில் கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி சென்றபோது கமுதி புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக பஸ் திரும்பி வந்தபோது புதுக்கோட்டை பஸ் நிறுத்த பகுதியில் வழிமறித்த கும்பல் பஸ்சுக்குள் ஏறி மாணவ-மாணவிகளை உருட்டு கட்டையால் தாக்கினர்.

இந்த வழக்கில் கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டையை சேர்ந்த வீரபாண்டி(வயது45), புலி உடையான்(45), செந்தூர்பாண்டி(55), முருகன்(54), விக்னேஷ்(34), முனீசுவரன்(35) ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் கடந்த 7-ந்தேதி சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன்(30) என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார். அவருக்கு வாரண்டு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிகண்டன் கோர்ட்டில் சரணடைந்தார்.

அதனை தொடர்ந்து அவர் மீதான வழக்கு விசாரணை தனியாக ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கயல்விழி, வாலிபர் மணிகண்டனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும், அபராத தொகையில் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளுக்கு தலா ரூ.3,600 வழங்கவும், மீதத்தொகை ரூ.200 வழக்கு செலவிற்காக அரசு கணக்கில் செலுத்தவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் காமராஜ் ஆஜரானார்.

மேலும் செய்திகள்