நிலக்கோட்டையில் பயங்கரம்: ஓட்டல் தொழிலாளி மனைவி அடித்து கொலை

நிலக்கோட்டையில் ஓட்டல் தொழிலாளி மனைவி அடித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-12-20 23:00 GMT
நிலக்கோட்டை, 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கியிருந்து ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி லட்சுமி (வயது 29). இவர், பூ கட்டும் வேலை செய்து வந்தார்.

கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அஜய் (10), சச்சின்குமார் (7), சூர்யா (5) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். தனது கணவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிப்பதால் நிலக்கோட்டை புதுத்தெருவில் உள்ள சகோதரி ரூபினி வீட்டில் லட்சுமி தனது மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் நிலக்கோட்டை மீனாட்சிபுரம் சாலையோரத்தில், நேற்று காலை லட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கடைக்கு செல்வதாக ரூபினியிடம் கூறிவிட்டு, லட்சுமி வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பாதது தெரியவந்தது. கடைக்கு செல்லும் வழியில் அவரை யாரோ வழிமறித்து, தலையில் அடித்து கொலை செய்து உள்ளனர்.

மேலும் லட்சுமி கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் மதுபானக்கடை உள்ளது. இதனால் லட்சுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட லட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்