சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-12-20 22:45 GMT
நாகர்கோவில்,

ஆறுகாணி காருண்யாபுரத்தை சேர்ந்தவர் சதீஸ் (வயது 27), தொழிலாளி. இவர் கடந்த 25-3-2014 அன்று வீட்டில் தனியாக இருந்த 9 வயதுடைய ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சதீஸ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆறுகாணி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சதீஸை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் நடத்தி வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட சதீசுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மீனாட்சி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்