சிறுமிக்கு காதல் தொல்லை: கல்லூரி மாணவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை

சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-21 22:15 GMT
பொம்மிடி, 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோழிமெய்க்கானூரை சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவள் அரூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பகுதியை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவர். இவர் சேலத்தில் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு கூறி அடிக்கடி மாணவர் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் சிலர் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்