வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் பண பரிவர்த்தனை பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கிகளில் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-21 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கிகளில் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

வேலைநிறுத்தம்

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி இணைப்பை கைவிட வேண்டும். ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும், ஸ்டேட் வங்கியில் உள்ளது போன்று மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் வங்கி அதிகாரிகள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட்னர். மாவட்டம் முழுவதும் உள்ள 180 வங்கி கிளைகளில் பணியாற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கிகளில் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

மேலும் வங்கி அதிகாரிகள் கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கனரா வங்கி அலுவலர் சங்க மண்டல தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் கோபிகண்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வங்கி அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்