கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை நெல்லையில் பெண்கள் உள்பட 250 பேர் கைது

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-21 22:00 GMT
நெல்லை, 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

முற்றுகை போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 12-வது நாளான நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் அருள்மாரி, துணைத்தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராம்குமார், அமைப்பு செயலாளர் ஆறுமுகம், வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

250 பேர் கைது

இதில் 80 பெண்கள் உள்பட மொத்தம் 250 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். பின்னர் அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் நலத்திட்டங்களை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்