திருநங்கை பபிதா ரோஸ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், காசு தர மறுக்கும் இடங்களில் அராஜகம் செய்வதும் கண்டிக்கத்தக்கது.;
தென்காசி, டிச.22-
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ராமச்சந்திரப்பட்டினத்தில் திருநங்கை பபிதா ரோஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், காசு தர மறுக்கும் இடங்களில் அராஜகம் செய்வதும் கண்டிக்கத்தக்கது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நான் கோரிக்கை மனு அளித்தேன். இந்த கோரிக்கை வைரலாக பரவி மத்திய அரசின் மசோதாவாக நிறைவேறும் அளவில் வந்துள்ளது. கடைகளில் சென்று அராஜகம் செய்யும் திருநங்கைகளால் வியாபாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட திருநங்கைகள் பாலியல் தொழில் செய்வதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே பபிதா ரோஸ் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநங்கைகள் தென்காசி அருகே ராமச்சந்திரப்பட்டினத்தில் உள்ள அவருடைய வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.